பாஜக - ஆர்எஸ்எஸின் பொய்ப் பிரசாரங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை வகுப்பதற்காக அனைத்து மாநில காங். பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய சோனியா கூறுகையில்,
“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் தவறான பிரச்சாரத்தை கருத்தியல் ரீதியாக நாம் எதிர்த்து போராட வேண்டும். நாம் இந்த போரில் வெற்றி பெற மக்கள் முன்பு அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
இறுதியாக, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவை மிக முக்கியமான தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைப்பை வலுப்படுத்துவதை நாம் அனைவரும் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட லட்சியத்தை மீறினால் மட்டுமே நடைபெறும்.
நமது ஜனநாயகம், நமது அரசியலமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் பொய்ப் பிரச்சாரங்களை அடையாளம் கண்டு எதிர்ப்பதற்கு முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்.”