பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் கைது

மதத்தின் அடிப்படையில் இருவேறு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கியது, சைபர் பயங்கரவாதம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டி 20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜம்மு காஷ்மீரின் மூன்று மாணவர்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தனர். உத்தரப் பிரதேசம் அக்ராவில் உள்ள பொறியியல் கல்லூரி அவர்களை இடை நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதத்தின் அடிப்படையில் இருவேறு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கியது, சைபர் பயங்கரவாதம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். எனவே, காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாயும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச காவல்துறையின் நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


கைது செய்யப்பட்ட அர்ஷித் யூசுப், அல்தாஃப் ஷேக், செளகத் அகமது கானாய் ஆகியோர் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப வளாகத்தில் படித்துவருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் வைத்திருப்பது ஒழுங்கீனமான செயல் என கல்லூரி விடுதி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து விடுதியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "விடுதி ஒழுங்கு குழு அந்த மூன்று மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாஜக இளைஞர் அணியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக ஜக்திஷ்பூரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அக்ரா நகர காவல்துறை கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறுகையில், "காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதற்கிடையே, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை திங்கள்கிழமை இடைநீக்கம் செய்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் நிதி இயக்குநர் பங்கஜ் குப்தா கூறுகையில், "பிரதம மந்திரி சூப்பர் சிறப்பு திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வந்தனர். மாணவர்களின் செயல் குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் ஏஐசிடிஇ-க்கும் தெரிவித்துள்ளோம். ஆனால், மாணவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்" என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, இந்தியா தனது முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இதுவே முதல் முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com