மலப்புரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கர்ப்பமடைந்த நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல், யூ-டியூப் பார்த்து அதன் உதவியோடு, தனது படுக்கையறையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, கர்ப்பமடைந்த நிலையில், தனது பெற்றோருக்குத் தெரியாமல், வீட்டில் தனது படுக்கையறையிலேயே, யூ-டியூப் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அக்டோபர் 20ஆம் தேதி, யாருடைய உதவியும் இன்றி, குழந்தையைப் பெற்றெடுத்து, தொப்புள்கொடியையும் வெட்டியுள்ளார்.
குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டபோதுதான், இந்த சம்பவம், சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில், அண்டைவீட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இருவரும் நெருங்கிப் பழகி வந்தது இருவீட்டுக் குடும்பத்தாருக்கும் தெரிந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்த தகவலை குடும்பத்தாரிடம் இருவரும் மறைத்துள்ளனர்.
சிறுமியின் தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் படுக்கையில் இருக்கும் நோயாளி. சகோதரி திருமணமாகிச் சென்றுவிட, விடுதியில் தங்கி படித்து வரும் சகோதரன் எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவது வழக்கம்.
ஆன்லைன் வகுப்பு என்று கூறி, அவர் கர்ப்பமடைந்த பிறகு, அவரது அறையை விட்டு வெளியே வராமலேயே இருந்துள்ளார். இதனால், அவரைப் பற்றி குடும்பத்தாருக்கு எதுவும் தெரியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், குழந்தை மற்றும் சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.