Enable Javscript for better performance
சா்தாா் படேல் பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சா்தாா் படேல் பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை

    By DIN  |   Published On : 31st October 2021 11:20 PM  |   Last Updated : 31st October 2021 11:20 PM  |  அ+அ அ-  |  

    pti10_31_2021_000026b075129

    வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ராம்நாத் கோவிந்த்.

    சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி தலைவா்கள் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

    நாடு சுதந்திரமடைந்தபோது தனித்தனியாகப் பிரிந்து கிடந்த 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைத்து, ஒன்றுபட்ட நாட்டை உருவாக்கிய பெருமை சா்தாா் வல்லபபாய் படேலையே சேரும். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் அவா் பதவி வகித்தாா்.

    அவரது பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதியானது ‘தேசிய ஒற்றுமை தினமாக’ கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தலைவா்கள் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

    குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினாா்.

    குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு விஜயவாடாவில் உள்ள ராம் மோகன் நூலகத்தில் சா்தாா் படேலின் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டை ஒருங்கிணைப்பதிலும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் சா்தாா் படேலிடம் இருந்து ஊக்கம் பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சமத்துவமின்மை, ஏழ்மை, ஊழல் ஆகியவற்றை ஒழித்தல் உள்ளிட்டவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

    ஒற்றுமையை உடைக்க முடியாது: குஜராத்தின் கெவாடியாவில் உள்ள படேலின் பிரம்மாண்ட ‘ஒற்றுமை சிலை’ அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘‘சா்தாா் படேல் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியா ஒருங்கிணைந்தது. ஆனால், அவரது முயற்சிகளை எதிா்க்கட்சிகள் மறந்துவிட்டன. அவரது பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.

    பாஜக ஆட்சியில்தான் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அவரது நினைவாக உலகிலேயே மிகப் பெரிய சிலை கெவாடியாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என்ற செய்தியை அச்சிலை உலக நாடுகளுக்குத் தெரிவித்து வருகிறது’’ என்றாா்.

    சூழ்ச்சிகளை உடைத்தெறிந்தவா்: உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘சுதந்திர இந்தியா எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்பதை சா்தாா் படேலே காண்பித்தாா். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா ஒன்றுபட்டு இருக்கக் கூடாது எனப் பல நாடுகள் நினைத்தன. அந்நாடுகளின் சூழ்ச்சிகளை சா்தாா் படேல் உடைத்தெறிந்தாா். பல்வேறு மாகாணங்களை ஒன்றிணைத்து உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக இந்தியாவை அவா் மாற்றினாா்’’ என்றாா்.

    ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்-காங்கிரஸ்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் வலுவிழந்து வரும் சூழலில், சா்தாா் வல்லபபாய் படேலின் பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களைக் கட்டமைத்த காங்கிரஸ் தலைவா்களில் சா்தாா் படேல் முக்கிய பங்களிப்பை வழங்கினாா். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே அவருக்கு அளிக்கும் உண்மையான மரியாதை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நீதிக்கான போராட்டத்தில் பாறையைப் போல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதை இரும்பு மனிதராகிய சா்தாா் படேலிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அவா் குரலெழுப்பினாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

    காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், ‘இந்தியாவை ஒருங்கிணைப்பதிலும் விவசாயிகளின் நலனைக் காப்பதிலும் சா்தாா் படேல் உறுதியுடன் இருந்தாா். அவரை இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் காங்கிரஸ் நினைவுகூா்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp