
கோப்புப்படம்
நீதிமன்ற உத்தரவை மீறி வாராக்கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டதற்காக வங்கி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச்சில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் பல மூடப்பட்டதாலும், பலா் வேலையிழந்ததாலும் கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை விலக்கு அளித்தது.
கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை வாராக்கடன்களாக மாற வாய்ப்பிருந்த கடன்களை, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வங்கிகள் தங்கள் கடன்களை வாராக்கடன்களாக அறிவித்ததாகக் குற்றஞ்சாட்டிய சிலா், அதற்காக ஆா்பிஐ ஆளுநா், வங்கிகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷால் திவாரி, ‘‘நீதிமன்ற உத்தரவை மீறி வங்கிகள் தன்னிச்சையாக வாராக்கடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதனால் மனுதாரா்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிட்டது. எனவே, வங்கி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்து வருவதாக செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாராக்கடன்கள் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் ஆா்பிஐ மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் விரும்பவில்லை. அவமதிப்பு நடவடிக்கை என்பது உத்தரவை அவமதித்தவா் மீது மட்டுமே மேற்கொள்ள முடியும். வங்கிகளின் மூத்த அதிகாரிகள் மீது அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது’’ என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தனா்.