ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த பிகார் எம்எல்ஏ கோபால் மண்டல் மதுபானம் அருந்தியதாக சக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் பின் எம்எல்ஏ தன்னுடைய தங்க சங்கிலி பறித்ததாகவும் பயணி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த மண்டலுக்கு எதிராக பிரகலாத் பாஸ்வான் என்ற பயணி தில்லி ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். "வெள்ளை நிற உள்ளாடையை மட்டும் அணிந்திருந்த எம்எல்ஏ மதுபானம் அருந்தியிருந்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். பின்னர், தங்க மோதிரம், சங்கிலி பறித்துக் கொண்டு என்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என புகாரில் குறிப்பிட்டிருந்தது.
பாட்னா - தில்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பிஹியா ஜிஆர்பி காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால் உள்ளாடையுடன் இருந்ததாக மண்டல் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தேன்.
ரயிலில் ஏறியவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஆயிற்று. நான் பொய் சொல்லவில்லை" என்றார். ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த சட்டப்பேரவை உறுப்பினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.