பிகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாட்னாவிலிருந்து தில்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் கோபால் மண்டல் உள்ளாடையுடன் திரிந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபால் மண்டல் செயலுக்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க, வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்புத்துறைத்துறை அலுவலர் ராஜேஷ்குமார் கூறுகையில், "எம்எல்ஏவின் செயல்பாடுகள் குறித்து சக பயணிகள் புகார் அளித்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்" என்றார்.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால் உள்ளாடையுடன் இருந்ததாக மண்டல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தேன்.
ரயிலில் ஏறியவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஆயிற்று. நான் பொய் சொல்லவில்லை" என்றார். ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த சட்டப்பேரவை உறுப்பினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.