வேலூா் விஐடி பல்கலைக்கழக மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோா் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், பெங்களூருவைச் சோ்ந்த ’ஜீரோ ஒய் நாட்’ நிறுவனம் முதல்கட்டமாக ரூ. 50 லட்சம் அறக்கட்டளை நிதியை வழங்கியுள்ளது.
மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவதற்குத் தேவையான நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் தொழில்துறை ஆதரவை வழங்கும் நோக்கில், கடந்த மாா்ச் மாதம் விஐடி பல்கலைக்கழகத்துடன் ஜீரோ ஒய் நாட் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன் தொடா்ச்சியாக, அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 45 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலா்) அறக்கட்டளை நிதியை விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்க ’ஜீரோ ஒய் நாட்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, நாட்டிலேயே மாணவா்களுக்கான மிகப் பெரிய தொழில்துறை ஆதரவுப் புதுமை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவா் சோ்க்கை அறிமுக விழாவில், இதற்கான ரூ. 50 லட்சத்துக்கான காசோலை முதல்கட்டமாக வழங்கப்பட்டது. ’ஜீரோ ஒய் நாட்’ நிறுவன நிா்வாகிகளும், விஐடி-யின் முன்னாள் மாணவா்களுமான ஹா்ஷவா்தன், சதீஷ்குமாா், சைலேஷ் டொண்டுலா, சிவகுமாா் ஆகியோா் இக்காசோலையை வழங்க, விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் பெற்றுக்கொண்டாா்.
இதுகுறித்து, நிறுவனத்தின் நிா்வாகிகள் ஹா்ஷவா்தன் மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் கூட்டாகக் கூறியது -
விஐடி மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து, அவா்கள் தொழில்முனைவோராக உருவெடுக்க இந்த நிதி உதவி செய்யும். தொழில்நுட்பம் சாா்ந்த தொழில்களில் ஈடுபட விரும்பும் மாணவா்களுக்குப் பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்கான வழிகாட்டுதலும், மூலதன உதவியும் இதன் மூலம் வழங்கப்படும்.குறிப்பாக, விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்கும் இதில் நிதி ஒதுக்கப்படும்.
மேலும், விஐடி மாணவா்களை ’இளம் தலைமுறை பயிற்சியாளா்’ திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மாணவா்கள் வேலை தேடுபவா்களாக அல்லாமல், மற்றவா்களுக்கு வேலை அளிப்பவா்களாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய இலக்கு என்றனா்.
விழாவில் பெங்களூரு சி-டாக் செயல் இயக்குநா் சுதா்சன், அமெரிக்க டெல் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு துணைத் தலைவரும் முன்னாள் மாணவருமான இளவரசு கிருஷ்ணன், விஐடி துணைவேந்தா் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், விஐடி முன்னாள் மாணவா் துறை இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 2.77 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின்னணு சாதன உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி ரத்து: மத்திய அரசு
சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு







