பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கீழமை நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி, இந்த வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி மோஹிட் டெரே கங்கனாவின் மனுவை இன்று தள்ளுபடி செய்தார்.
அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து கங்கனா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கங்கனா தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அக்தர் தரப்பு வழக்கறிஞர் ஜெய் பரத்வாஜ், "பாடலாசிரியரின் புகாரையும் கங்கனா அளிக்க நேர்காணலையும் முறையாக ஆராய்ந்த பின்புதான், மாஜிஸ்திரேட் காவல்துறை விசாரணைக்கு உத்திரவிட்டார். அதில்தான், அவர் அவதூறான கருத்துகளை தெரிவித்திருந்தார்" என்றார்.
இதையும் படிக்க | எந்தத் தடுப்பூசி சிறந்தது? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்?
ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த தொலைக்காட்சி நேர்காணலின்போது தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடந்த நவம்பர் மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, அக்தரின் புகார் குறித்து விசாரிக்க ஜூஹூ காவல்துறையினருக்கு நீதிமன்றம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.