நிலக்கரி ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி ஆஜராக அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை தில்லியில் ஆஜராக அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறுகிய கால அளவில் பயணம் செய்ய இயலாது எனக் கூறி நேரில் ஆஜராவதிலிருந்து அவர் விலக்கு கேட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜம்நகர் இல்லத்தில் அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணை நடைபெறுவதற்கு முன்பு செய்தியாளரை சந்தித்த அவர், "விசாரணக்கு தயாராக உள்ளேன். முழு ஒத்துழைப்பு அளிப்பேன். கொல்கத்தா தொடர்பான வழக்குக்கு தில்லியில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். நவம்பர் மாதம், நான் தெரிவித்ததை மீண்டும் உறுதிபட தெரிவிக்கிறேன். சட்டவிரோதமான பண பரிவர்த்தனைக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய விசாரணை அமைப்பு நிரூபித்தால் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க தயார்" என்றார்.
குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள், சட்டவிரோதமான பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கும் பானர்ஜிக்கும் உள்ள தொடர்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தின் குனுஸ்தோரியா, கஜோரா பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 பேரை அந்தத் துறை கைது செய்துள்ளது.
சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு ஈட்டப்பட்ட பணத்தில் அபிஷேக் பானா்ஜிக்கும் பணம் தரப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதில் அபிஷேக் பானா்ஜியை செப் 6-ஆம் தேதியும், அவரின் மனைவியை செப்.1-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் கரோனா பரவலை காரணம் காட்டி அவரின் மனைவி விசாரணைக்கு ஆஜராகவில்லை.