பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் படைத்த சாதனை நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களின் மன உறுதியையும் ஊக்கப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது பேசிய மோடி, "உங்களிடமிருந்து உந்து சக்தி பெற்றுள்ளேன். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை தீவிரமாக எடுத்து கொள்வதற்கு நீங்கள் படைத்துள்ள சாதனை உத்வேகம் அளிக்கும். நாடு முழுவதும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு வேகமாக அதிகரிக்க உங்களின் சாதனை உதவியுள்ளது.
உண்மையான விளையாட்டு வீரர் என்பவர் வெற்றியை கண்டோ தோல்வியை கண்டோ ஒரு இடத்தில் சிக்கி கொள்ள மாட்டார். முன்னேறி கொண்டே இருப்பார். நாட்டின் தூதர்களாக நீங்கள் மாறியுள்ளீர்கள். உங்களின் சாதனையால் உலகளவில் நாட்டின் கெளரவத்தை உயர்த்தியுள்ளீர்கள்" என்றார்.
பின்னர், இல்லத்திற்கு அழைத்து சிறப்பித்ததற்காக பிரதமர் மோடி வீரர்கள் நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, வீரர்கள் அனைவரும் சேர்ந்து கையெழுத்திட்ட போர்வையையும் விளையாட்டு உபகரணங்களையும் மோடிக்கு அவர்கள் பரிசாக அளித்தனர்.