குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து விஜய் ரூபானி விலகியதையடுத்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்படுத்தற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ராஜினாமா செய்ததற்கான காரணத்தை வெளியிடாமலேயே விஜய் ரூபானி பதவி விலகினார்.
குறிப்பாக, மாநிலத்தின் வளர்ச்சி பாதை புதிய தலைமையின் கீழ் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தொடர வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, குஜராத் மாநில தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். மத்திய அமைச்சரும் குஜராத் மாநில மேலிட பார்வையாளருமான பிரகலாத் ஜோஷி இதுகுறித்து கூறுகையில், "குஜராத் பாஜக தலைவர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளேன். அதற்கு பிறகு, அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கப்படும்" என்றார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக தேசிய செயலாளர் தருண் சுக் ஆகியோர் பாஜக மாநில தலைவர் சி. ஆர். பாட்டீலை அவரது வீட்டில் இன்று காலை சந்தித்து பேசினர்.
இதையும் படிக்க | குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜிநாமா
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபாலா, லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரிலிருந்து ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.