புது தில்லி: தில்லியின் தெற்கு மாவட்டத்தில் தொடர் சங்கிலிப் பறிப்பு மற்றும் செல்லிடப்பேசி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை சிறப்புப் படையினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
காவல்துறையினருக்குக் கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை நேற்று சுற்றி வளைத்தபோது, அவர் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு காவலர்களை மிரட்டியுள்ளார். காவல்துறையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர்.
இதையும் படிக்கலாமே.. காற்றில் பறக்கிறதா கரோனா கட்டுப்பாடுகள்?
அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ஹரீஷ் என்பதும், தான் கொள்ளையடித்த மூன்று தங்க செயின்களை நேப் சராய் பகுதியில் விற்பனை செய்ய வந்து போது காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், 4 செல்லிடப்பேசிகள், 37.50 கிராம் எடையுள்ள 4 தங்க செயின்கள் மற்றும் இதர தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் புது தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர உணவகத்தில் சமையல்கலைஞராக இருப்பது தெரிய வந்தது. இது காவல்துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.