
கோப்புப்படம்
பிஎம் கேர்ஸ் நிதி இந்திய அரசுக்கு சொந்தமானது அல்ல என்றும் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் யாவும் இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியின் கீழ் வராது என்றும் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலக துணை செயலாளர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "அரசியலமைப்பு சட்டம் பிரிவு 12-இன் கீழ், இந்த அறக்கட்டளை அரசுடைதாக இருந்தாலும் சரி வேறு நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் சரி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2[எச்] பிரிவின் படி பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, பொதுப்பிரிவு 8-இன் கீழ் அல்லது தகவல் அறியும் சட்டம் உள்பிரிவு [இ] மற்றும் [ஜே] கீழ், இதுகுறித்த தகவல்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 12-இன் கீழ் பிஎம் கேர்ஸ் நிதியை அரசுடைமையாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இத்தகவலை தெரிவித்தது.
பிஎம் கேர்ஸ் நிதி பிரதமரால் உருவாக்கப்பட்டபோதிலும் அதன் அறக்கட்டளை உறுப்பினர்களாக பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகியோர் இருந்தபோதிலும் இது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறுவது மக்களுக்கு தீங்கிழைக்கும்விதமாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில், "அறக்கட்டளையில் நான் வகிப்பது கெளரவமிக்க பதவி. இது வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தியக் கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் பரிந்துரைத்த குழுவில் பட்டய கணக்காளராக இருப்பவரே பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் நிதியை தணிக்கை செய்கிறார்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அறக்கட்டளையால் பெறப்பட்ட நிதி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.