கோவாவில் அமைக்கப்படும் மின்னணு நகரம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாராகிவிடும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
வட கோவாவில் உள்ள துயெம் என்ற நகரம் மின்னணு நகரமாக உருவாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மின்னணு நகரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்படி நகரம் முழுவதும் அனைத்தும் மின்னணுமயக்கப்படும்.
இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக பணிகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் 5.90 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த மின்னணு நகரம் வருகிற 2022 மார்ச்க்குள் தயாராகிவிடும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
சாலை, மின்சாரம், இணைய இணைப்பு மற்றும் நீர் வழங்கல் தேவை உள்பட அனைத்து உள்கட்டமைப்புகளும் மார்ச் 2022 க்குள் முடிக்கப்படும் என்று மாநில தலைநகரில் நடைபெற்ற முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் கூறிய முதல்வர் சாவந்த், ஏறக்குறைய 30 முதலீட்டாளர்கள் மின்னணு உற்பத்தி மையங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐஐடி கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும். இதற்காக ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்த திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கோவாவில் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரும் பங்காற்றும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.