மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மத்திய பிரதேசம் இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்திருப்பது பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று நான் கூறினேன். அவர்களுடையே வெளிநாட்டு பின்புலம் எந்த விதத்திலும் பிரச்னையாக இருக்காது என்றே கருதுகிறேன். அமெரிக்காவின் துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பொறுப்பு வகிக்கும்போது, சோனியா காந்தி ஏன் இந்திய பிரதமராக கூடாது.
சோனியா காந்தி இந்தியாவின் குடிமகன். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்படியிருக்கையில், அவர் ஏன் பிரதமராக வரக் கூடாது?" என்றார்.
சரத்பவாருக்கு ஆதரவாக பேசிய அவர், "2004ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு, சோனியா காந்தி பிரதமராக பதவியேற்றிருக்க வேண்டும். அப்படி, சோனியா காந்தி பிரதமராக விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில், மன்மோகன் சிங்குக்கு பதில் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரை பிரதமராக்கியிருக்க வேண்டும்.
சரத் பவார் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர். பிரதமராக அவர் வந்திருந்தால், காங்கிரஸ் இப்போது இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காது" என்றார்.