ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமான ஒன்று. மலைகள் சூழ்ந்து அமைத்துள்ள இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடம். இதனால் ஆண்டுதோறும் இங்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பராமரிப்பு பணிகளும் முடங்கியிருந்தன.
தற்போது கரோனா பொதுமுடக்க விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் தால் ஏரியின் பழைய அழகை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஏரிகள் மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையம் மூலமாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் பஷீர் அஹ்மத் பட் இதுகுறித்து, 'இது ஒரு சவாலான வேலை. ஏரிகளைச் சூழ்ந்துள்ள லில்லி இலைகளை அகற்ற 15-16 கிரேன் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தால் ஏரி, ஸ்ரீநகரில் ஒரு முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கிறது. கரோனா காரணமாக தால் ஏரியை சுத்தம் செய்யும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. பழையபடி தால் ஏரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
உள்ளூரைச் சேர்ந்த ஆஷிக் ஹுசைன் இதுகுறித்து, 'தால் எரி தான் எங்களுடைய ஒரே வருமானம். மேலும் இது எங்கள் பாரம்பரியமும்கூட. கடந்த இரு ஆண்டுகளாக படகு சவாரி இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். தற்போது தால் ஏரி சுத்தம் செய்யப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.