பாட்னா: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கவே மாணவர்கள் கண்விழி பிதுங்கும் நிலையில், பிகார் மாநிலம் லலித் நாராயண் மிதிலை பல்கலை மாணவர் ஒருவர் 100க்கு 151 மதிப்பெண் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தர்பாங்கா பகுதியில் உள்ள இந்த பல்கலைக்கழகம் வழக்கமாகவே தனது இதுபோன்ற விநோதமான செயல்களால் புகழின் உச்சியில் இருக்கிறது.
இந்த முறை, பெகுசராய்யில் உள்ள கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) பயின்ற மாணவர், ஒரு பாடத்தில் 100க்கு 151 மதிப்பெண் எடுத்ததாக தேர்வு முடிவு வெளியானது.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தேர்வு முடிவைப் பார்த்த மாணவர் கடுமையாக அதிர்ச்சி அடைந்திருப்பார். இது குறித்து அவரே கூறுகிறார்.. தேர்வு முடிவைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஆனால் அமைதியாக இருந்தேன், மதிப்பெண் சான்றிதழ் வரும்போது பார்க்கலாம் என்று. ஆனால், மதிப்பெண் சான்றிதழும் அப்படியே வந்தது. ஒரு முறை கூட பரிசோதனை செய்யாமலா மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆச்சரியமாக இருந்தது என்கிறார் மாணவர் அன்மோல்.
பிறகு பல்கலைக்கழகத்தில் கேட்டதற்கு, இது சாதாரண எழுத்துப் பிழைதான் என்று கூறி, புதிய மதிப்பெண் பட்டியலை அளித்திருக்கிறார்கள்.
இவரைப் போலவே, கணிதப்பதிவியல் தேர்வெழுதிய திரிமுகன் என்ற மாணவர், அப்பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.