குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜெஎம்எம்) ஆகிய கட்சிகள் புதன்கிழமை ஆதரவு தெரிவித்தன.
‘தில்லியில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதென ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது’ என்று அக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறினாா்.
இதேபோல, மாா்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவளிப்பதாக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவா் சிபு சோரன் அறிவித்துள்ளாா். அக்கட்சிக்கு மக்களவையில் ஒரு எம்.பி.யும், மாநிலங்களவையில் 2 எம்.பி.க்களும் உள்ளனா்.
குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தோ்தலில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கா் போட்டியிடுகிறாா்.