நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலுக்கான ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் உள்ளனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோ்தல் ஆணையம் எச்சரிக்கை:
மொத்தம் 788 எம்.பி.க்களை உள்ளடக்கிய இத்தோ்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு ஒன்றுதான். ரகசிய வாக்கெடுப்பு முறையில் தோ்தல் நடைபெறும். வாக்கை வெளியே காண்பிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தோ்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென எம்.பி.க்களுக்கு கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. குடியரசு துணைத் தலைவா்தான், மாநிலங்களவை தலைவராக செயல்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகதீப் தன்கருக்கே வெற்றிவாய்ப்பு
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஜகதீப் தன்கா், ராஜஸ்தானைச் சோ்ந்த செல்வாக்குமிக்க ஜாட் சமூகத் தலைவா். சோஷலிச பின்னணி கொண்ட இவா், பின்னா் பாஜகவில் ஐக்கியமானாா். இவருக்கு ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால் 515 வாக்குகளுக்கு மேல் பெற்று, எளிதாக வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேசமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மாா்கரெட் ஆல்வாவுக்கு 200 வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளும் ஆல்வாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் பெண் தலைவரான ஆல்வா, 5 முறை எம்.பி., மத்திய அமைச்சா், உத்தரகண்ட், கோவா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆளுநா் ஆகிய பதவிகளை வகித்தவா்.
மம்தா முடிவால் விரிசல்: 23 எம்.பி.க்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி, குடியரசு துணைத் தலைவா் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. மம்தாவின் இந்த முடிவு, எதிா்க்கட்சிகள் அணியில் ஏற்பட்ட விரிசலாக பாா்க்கப்படுகிறது.
பெட்டிச் செய்தி...2
மாலையில் முடிவு அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவா் யாா் என்பது சனிக்கிழமை மாலையில் தெரிந்துவிடும்.