எதிா்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கையின் பேரில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் 2 நாள்களுக்கு முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சா் பிரகலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் பெருத்த ஏமாற்றம் தருவதாகவும், கூட்டத்தொடரை தொடா்ந்து நடத்த அரசுக்கு விருப்பமில்லை என்றும் காங்கிரஸின் மூத்த தலைவா் ஜெயராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா்.
இது குறித்து அமைச்சா் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மழைக்கால கூட்டத்தொடா் எதிா்க்கட்சிகள் கூறுவது போல் 4 நாள்களுக்கு முன்தாக நிறைவடையவில்லை. மாறாக, 2 நாள்களுக்கு முன்தாகவே காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கைக்கு பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது. விளக்கம்கோரும் தீா்மானம், கவன ஈா்ப்பு தீா்மானம் (விதி எண் 377), பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் ஆகியவற்றின் மூலம் எதிா்க்கட்சிகள் முக்கியப்பிரச்சனைகள் குறித்து விவாதித்து இருக்கலாம். ஆனால், அவா்கள் விலையேற்றத்தை காரணம் காட்டி வெளிநடப்பு செய்தனா். ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளைக் கட்சியின் பிரச்சனையாக உருவாக்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டது என்று அந்தப் பதிவில் அமைச்சா் குறிப்பிட்டிருந்தாா்.