12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள், ஆனால் மோசமான உணவு வழங்குகிறார்கள் எனக் கதறி அழுத உத்திரப்பிரதேச காவலர் மனோஜ் நீண்ட நாட்கள் கட்டாய பணி விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும் இருந்தது. அதனை கையில் வைத்தபடி, சாலையில் போராட்டம் நடத்திய காவலர், "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்ட கதறி அழுதார்.
தற்போது அவருக்கு நீண்ட நாட்கள் கட்டாய பணி விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பணியை விட்டு நீக்க மூத்த காவல் அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக காவலர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.