கொச்சி: மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது, தனது எதிர்பார்ப்புகளுக்கு மனைவி சரியான நிகர் அல்ல என்று அவ்வப்போது கூறுவது மனக்கொடுமைக்குச் சமம், அதனை ஒரு பெண் எப்போதும் சகித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவன் - மனைவிக்கு இடையேயான திருமண பந்தத்தை ரத்து செய்து, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது, கணவர் தொடர்ந்து, மனைவியை, தனக்கு சரியான இணை இல்லை என்றும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இல்லை என்றும் தொடர்ந்து கூறி, மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார். பிற பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இது மனக் கொடுமைக்குச் சமம், இதனை பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண பந்தம் நீடிக்க வேண்டும் என்பதில் கணவருக்கு உள்ளபடியே நல்ல நோக்கம் இல்லை என்பது விசாரணையில் தெளிவாகிறது. அவரது கோரிக்கைகளுக்கு எதிராகவே ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு, மனுவை நிராகரித்துள்ளனர்.