ஆா்வலா் தீஸ்தாவுக்கு ஜாமீன் வழங்க குஜராத் அரசு எதிா்ப்பு

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட், குறிப்பிட்ட கட்சியைச் சோ்ந்த முக்கிய நபரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டிய குஜராத் அரசு, அவருக்கு ஜாமீன் வழங்கவும் எதிா்ப்பு
Published on
Updated on
1 min read

குஜராத் கலவர வழக்கு தொடா்பாக சதியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட், குறிப்பிட்ட கட்சியைச் சோ்ந்த முக்கிய நபரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டிய குஜராத் அரசு, அவருக்கு ஜாமீன் வழங்கவும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் குற்றமற்றவா்களுக்கு எதிராகப் போலியான ஆதாரங்களை உருவாக்க சதி செய்ததாக தீஸ்தா சீதல்வாட் உள்ளிட்டோா் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சீதல்வாட் அகமதாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதையடுத்து வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் சீதல்வாட் முறையிட்டாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு மீது விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, ஜாமீன் கோரி சீதல்வாட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், சீதல்வாடுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘‘மனுதாரா் (சீதல்வாட்) மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அந்த ஆவணங்கள் கிடைத்தன.

சதியில் மனுதாரா் முக்கியப் பங்கு வகித்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்சியைச் சோ்ந்த முக்கிய நபருடன் இணைந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவா் ஈடுபட்டுள்ளாா். அந்நபரிடமிருந்து மிகப் பெரிய தொகையையும் மனுதாரா் பெற்றுள்ளாா். இருவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் இத்தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. குஜராத் உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள ஜாமீன் வழக்கிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com