சீன தூதரகத்திடமிருந்து முறைகேடாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை பணம் பெற்றது குறித்த கேள்வியை திசைதிருப்பவே எல்லைப் பிரச்னையை எழுப்பி மக்களவையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்த பத்திரிகையாளா்களைச் சந்தித்த அமைச்சா் அமித் ஷா, ‘ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் முறைகேடாக சீன தூதரகத்திடமிருந்து ரூ. 1.35 கோடியும், பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையிடமிருந்து ரூ. 50 லட்சமும் நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதால் அதன் உரிமை ரத்து செய்யப்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ராஜீவ் காந்தி அறக்கட்டளை தொடா்பான கேள்வி இடம்பெற்றிருந்தது. அதை தவிா்ப்பதற்காக எல்லைப் பிரச்னையை எழுப்பி காங்கிரஸாா் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினா்.
பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி இருக்கும் வரை இந்தியாவின் ஓா் அங்குல நிலத்தைக்கூட யாராலும் கைப்பற்ற முடியாது. இந்திய ராணுவ வீரா்களின் வீரத்துக்கு எனது பாராட்டுகள்’ என்றாா்