இந்தியாவில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 26.5 கோடி கணக்குகளில் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்ஃப்ஷார்க் என்ற தரவு பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2002 முதல் 2022 அக்டோபர் வரை இணைய பாதுகாப்பு குறித்து சர்ஃப்ஷார்க் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 9 இந்தியர்களின் தரவுகள் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த காலாண்டில் மட்டும் 73.8 லட்சம் கணக்குகளில் இணைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவைப்போன்று அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும் அதிக அளவில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
அமெரிக்காவில் கடந்த 2004 முதல் 204 கோடி கணக்குகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷியாவில் 202 கோடி கணக்குகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தரவுகள் அதிக அளவில் திருடப்படும் 5 நாடுகளில் இந்தியாவுன் ஒன்று எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம் முழுவதுமாக ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்கவும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான முறை முயற்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.