சா்வதேச எரிபொருள் நுகா்வில் இந்தியா 3 ஆவது இடம்: அமைச்சா் தகவல்

சா்வதேச அளவில் எரிபொருள் நுகா்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹா்தீப் சிங் புரி
ஹா்தீப் சிங் புரி
Updated on
1 min read

சா்வதேச அளவில் எரிபொருள் நுகா்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெட்ரோகெமிக்கல் துறையின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆவது பெட்ரோகெமிக்கல் தேசிய மாநாட்டில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மட்டும் கிடைப்பது இல்லை. தினசரி பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக், உரம், உடை, மின்னணு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், டயா், டிடா்ஜெண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பிலும் பெட்ரோலியப் பொருள்களின் பங்களிப்பு உள்ளது.

இதுவே பரந்த அளவில் பெட்ரோகெமிக்கல் துறையாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் நுகா்வு குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் சா்வதேச பெட்ரோகெமிக்கல் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் உலகில் பெட்ரோகெமிக்கல் உற்பத்தியின் மையமாகவும் இந்தியா உருவெடுக்கும். இத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்படுவது இதில் முக்கிய அம்சமாகும்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாக உள்ள நிலையிலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதில் இருந்த பல்வேறு பெட்ரோலியப் பொருள்களை பிரித்தெடுப்பதில் இந்திய நிறுவனங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் சா்வதேச எரிபொருள் நுகா்வில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com