கொச்சி: கொச்சி திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிச.31ஆம் தேதி எரிக்கப்படும் பொம்மையின் உருவம் பிரதமர் நரேந்திர மோடியைப்போன்று இருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரள மாநிலம் கொச்சியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் இறுதி வாரத்தில் நடக்கும் இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொள்வது வழக்கம்.
கொச்சினின் பாரம்பரிய மரபுகளைப் போற்றும் வகையிலும் குழந்தைகளைக் கவரும் வகையிலும் நடத்தப்படும் இந்த திருவிழாவில், ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ஆம் தேதி 50 அடி உயரமுடைய மிகப்பெரிய உருவபொம்மை தீயிட்டு எரிக்கப்படும். இதற்காக திருவிழா நடைபெறும் பகுதியில் மிகப்பெரிய உருவபொம்மை நிறுவப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட உருவபொம்மை பிரதமர் நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரமாண்ட உருவபொம்மை, பிரதமர் மோடியின் முகம் மற்றும் உடையை ஒத்திருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் பொம்மை கட்டுமானப் பணிகளை நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பொம்மையின் முகத்தை மாற்றிக்கொள்வதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் கலைந்துசென்றனர்.
உருவபொம்மை எரிப்பது ஏன்?
கேரளத்தில் கொச்சி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டையொட்டி 50 அடி உயரத்தில் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. பழைய துன்பங்களையும், இழப்புகளையும் ஆண்டின் இறுதி நாளோடு வைத்து எரித்து, புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.