பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். மெலடி குயீன் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று காலை பிரீச் காண்டி மருத்துவமனைக்குச் சென்று லதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கோவா முதல்வர் பிரமோத், சரத் பவார், சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முப்படை, மகாராஷ்டிர காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.