கரோனா நிவாரண திட்டத்தின் கீழ் இதுவரை 12,309 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியை தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம்(இஎஸ்ஐசி) வழங்கியுள்ளது.
கரோனா பாதிப்பால் உயிரிழந்த, காப்பீடு செய்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு உதவ கரோனா நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இஎஸ்ஐசி நிறுவனம் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி ஊதியத்தில் 90 சதவீதம் அவா்களின் தகுதியான வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள இத்திட்டம் அடுத்த மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். பயனாளிகளைச் சாா்ந்தவா்கள் 12,309 பேருக்கு நிவாரண தொகை ரூ.34.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கரோனா தொற்று நிலவரத்தை சமாளிக்க பல நடவடிக்கைகளை இஎஸ்ஐசி எடுத்துள்ளது. ஒவ்வொரு இஎஸ்ஐசி மருத்துவமனையிலும் 20 சதவீத படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கரோனா இரண்டாவது அலையின்போது, 33 இஎஸ்ஐசி மருத்துவமனைகள் 4,500 படுக்கைகள் மற்றும் 400 வென்டிலேட்டா்களுடன் கரோனா பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப 50 மருத்துவமனைகளை, கரோனா பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றவும் இஎஸ்ஐசி தயாராக உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.