நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மொரார்ஜி தேசாயின் படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
1896ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் மொரார்ஜி தேசாய் பிறந்தார். பிப்ரவரி 29, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள். அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்தநாள் எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும், மரியாதையும் இன்னும் கூடிவிடுகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய், 1977, மார்ச் முதல் 1979 ஜூலை வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் 4வது பிரதமரான அவருக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேராத முதல் பிரதமர் என்ற பெருமையும் உண்டு.
பாகிஸ்தானுடன் அமைதி முயற்சியை மேற்கொண்டதால், பாகிஸ்தானின் மிக உயரிய நிஷான் - இ - பாகிஸ்தான் விருதை அந்நாடு அவருக்கு வழங்கி கௌரவித்தது. இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் மொரார்ஜி தேசாய்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது புகைப்படம், கடந்த 1995ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவால் திறந்துவைக்கப்பட்டது.
அதிக வயதில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றவர் என்ற பெயரையும் மொரார்ஜி தேசாய் பெற்றார். 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி இந்தியப் பிரதமராக பதவியேற்கும்போது அவரது வயது 81.