சித்தார்த் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி என்று பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றபோது கடந்த 5-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் போட்ட சுட்டுரைப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு பிரபலங்களும் பெண்கள் அமைப்பினரும் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று காலை சாய்னா நேவாலிடம் சித்தார்த் கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், தன்னுடைய தவறான செயலுக்கு சித்தார்த் வெளிப்படையாக மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிப்பதாக சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, பிரதமரின் பாதுகாப்பு குறித்த என்னுடைய பதிவுக்கு அவர்தான் பதிலளித்தார். தற்போது அவர் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த சுட்டுரைப் பதிவு இணையத்தில் வைரலானது ஆச்சரியமாகதான் இருந்தது. இது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. ஆனால் அவர் மன்னிப்புகோரியது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் பெண்ணைப் பற்றி பேசியுள்ளார். ஒரு பெண்ணை அதுபோன்று இழிவாக குறிவைத்து பேசக்கூடாது. அதனால் நான் வருந்தவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும் என்று கூறினார்.