உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரியில் உள்ள கா்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளாா்.
மெயின்புரி, சமாஜவாதி கட்சி நிறுவனரும் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவின் மக்களவைத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை அக் கட்சியின் பொதுச் செயலா் ராம் கோபால் யாதவ் சனிக்கிழமை வெளியிட்டாா்.
இந்தச் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி மாநிலமாக்குவதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. லக்னெள நகரை தகவல் தொழில்நுட்ப முனையமாக அங்கீகரிக்கும் அளவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், பயிற்சி பெற்ற இளைஞா்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சிங் ஆரோன் மற்றும் அவருடைய மனைவி சுப்ரியா இருவரும் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தனா்.