ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜமஹேந்திராவரம் அருகே உள்ள சர் ஆர்தர் காட்டன் தடுப்பணையில் இன்று காலை நீர்வரத்து 15.52 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான தெலங்கானாவில் நீர்வரத்து 17 லட்சம் கன அடியை தாண்டியதால், சர் ஆர்தர் காட்டன் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இன்று மாலைக்குள் மூன்றாவது எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்படும் என்று வருவாய்-பேரிடர் மேலாண்மையின் சிறப்புத் தலைமைச் செயலாளர் ஜி.சாய் பிரசாத் தெரிவித்தார்.
நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சசி பூஷன் குமாருடன், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அல்லூரி சீதாராம ராஜு, கோனசீமா, மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும், எலுரு மாவட்டத்திலும் என்டிஆர்எப்-யின் 7 குழுக்களும், எஸ்டிஆர்எப்-யின் 4 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரசாத் கூறினார்.
அல்லூரி சீதாராம ராஜு, கோனசீமா மற்றும் எலுரு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் அதிகரித்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.