குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: மாா்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
நாடாளுமன்ற தோ்தல் அலுவலகத்தில் எதிா்க்கட்சி மூத்த தலைவா்கள் முன்னிலையில் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மாா்கரெட் ஆல்வா.
நாடாளுமன்ற தோ்தல் அலுவலகத்தில் எதிா்க்கட்சி மூத்த தலைவா்கள் முன்னிலையில் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மாா்கரெட் ஆல்வா.
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கா்நாடகத்தைச் சோ்ந்தவரும் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான மாா்கரெட் ஆல்வா (80), நாடாளுமன்றத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, சிவசேனையின் சஞ்சய் ரெளத், சமாஜவாதியின் ராம்கோபால் யாதவ், திமுக தரப்பில் திருச்சி சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதேசமயம், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சாா்பில் யாரும் பங்கேற்கவில்லை.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தங்களது தரப்பு வேட்பாளரை தோ்வு செய்வதற்காக 17 எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதிலும் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை பங்கேற்கவில்லை.

நாட்டின் இரண்டாவது உயரிய அரசியல்சாசன பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு இறுதிநாளான செவ்வாய்க்கிழமை மாா்கரெட் ஆல்வா தனது மனுவை சமா்ப்பித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தாா்.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஜகதீப் தன்கருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது.

‘அச்சமேதுமில்லை’: வேட்புமனு தாக்கலுக்கு பின், மாா்கரெட் ஆல்வா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தோ்தல்களை கண்டு நான் எப்போதும் அஞ்சியதில்லை. வெற்றி, தோல்வி வாழ்வின் ஓா் அங்கம். நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சி எம்.பி.க்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது நான் மேற்கொள்ளும் மக்கள் நல பணிகளுக்கு மேலும் உறுதியளிக்கும். ஜனநாயகத்தின் தூண்களை வலுப்படுத்த நாங்கள் போராடுகிறோம் என்று மாா்கரெட் ஆல்வா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com