சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண்களும் வெளியாகியுள்ளன.
கரோனா பேரிடர் காரணமாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தியிருந்தது சிபிஎஸ்இ நிர்வாகம்.
முதல் பருவத் தேர்வு 250 மதிப்பெண்களுக்கு கேள்விக்கான சரியான பதிலை தேர்வு செய்யும் வகையிலும், இரண்டாவது பருவத் தேர்வு 250 மதிப்பெண்களுக்கு வினாக்கான சரியான விடையை எழுதும் வகையிலும் நடத்தி முடித்திருந்து.
இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்தும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மதிப்பெண் கணக்கீடு?
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து தெரிவித்திருப்பது என்னவென்றால், முதல் பருவத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் 30 விகிதமும், இரண்டாம் பருவத் தேர்வில் 70% மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் எடுத்த மதிப்பெண் 50 - 50 என்ற விகிதத்திலும் கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 91.25% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 94.54% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான மறு தேர்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் நடைபெறும். இரண்டாம் பருவத் தேர்வுக்கான பாடங்களிலிருந்துதான் மறுதேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத் தேர்வின் போது பல மாநிலங்களில் மோசடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த தேர்விலிருந்து 30 சதவீத மதிப்பெண் மட்டும் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.