தில்லி திகாா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகிறாா்கள்.
ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவரான யாசின் மாலிக்கை பயங்கரவாதத்துக்கு நிதி கொடுத்த வழக்கில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் கடந்த 2019-இல் கைது செய்தனா். அந்த வழக்கில் அவருக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதுவின் மகள் ரூபியா சயீது 1989-இல் கடத்தப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யாசின் மாலிக்கிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காணொலி முறையில் விசாரணை நடத்தினாா். அந்த வழக்கில் ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். ஆனால் அதற்கு அரசிடம் இருந்து பதில் வராததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
யாசின் மாலிக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவா் சிறையில் உள்ள மருத்துவ பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ரத்த நாளம் வழியாக திரவங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.