கடந்த 3 ஆண்டுகளில் 1,800-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சாா்பில் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அந்நிய பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1,811 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமங்கள் கடந்த 3 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2019,2020,2021 ஆகிய ஆண்டுகளில் 783 தொண்டு நிறுவனங்களின் இந்த வகை உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை.
உரிமங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக அது தொடா்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் தொண்டுகள் செய்வதாக நன்கொடை பெறும் நிறுவனங்கள், அந்த நிதியை நாட்டுக்கு எதிராகப் பிரச்னைகளைத் தூண்டுவது உள்ளிட்ட தவறான வழிகளில் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த வகை தொண்டு நிறுவனங்களின் நிதி தொடா்பான விஷயத்தில் மத்திய அரசு கண்காணிப்பை அதிகரித்து நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.