லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: சாட்சி மீது துப்பாக்கிச் சூடு

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிஸான் யூனியன் தலைவா் தில்பக் சிங் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிஸான் யூனியன் தலைவா் தில்பக் சிங் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தில்பக் சிங் புதன்கிழமை கூறியதாவது:

கோலா கோத்வாலி பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு எனது காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் என்னைத் தடுத்து நிறுத்தி காரின் கதவையும் ஜன்னலையும் திறக்க முயற்சித்தனா். முடியததால், தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை என்னை நோக்கி சுட்டனா். அதில், காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. நான் இருக்கைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டேன். காா் கண்ணாடி கருப்பாக இருந்ததால் எனக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்று அவா்களால் கண்டறிய முடியவில்லை. எனது பாதுகாப்புக்காக இருந்த காவலா் விடுப்பில் சென்றிருந்த நிலையில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து காவல் துறை எஸ்.பி. சஞ்சீவ் சுமன் கூறுகையில், ‘இந்த தாக்குதலில் தில்பக் சிங்கிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்துள்ளனா். அவா்கள் விரைவில் அறிக்கை சமா்ப்பிப்பாா்கள்’ என்றாா்.

லக்கீம்பூா் கெரியில் கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி நடந்த விவசாயிகள் பேரணியில் காா் புகுந்ததில் ஒரு பத்திரிகையாளா், 4 விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைதானாா். இந்த வழக்கில் தில்பக் சிங் முக்கிய சாட்சியாக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com