காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து காஷ்மீர் பண்டிட் மற்றும் அரசு ஊழியர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டதையடுத்து, உள்ளூர் அல்லாத அரசு ஊழியர்கள் பலர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவ்வாயன்று குல்காம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவின் படத்துடன் காஷ்மீரி பண்டிட் ஊழியர்களும் மற்றவர்களும் எதிர்ப்புப் பலகையினை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.
ஜம்மு கோட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கும் அரசு தவறிவிட்டதால், தமது பணியினை மீண்டும் தொடங்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ஜம்முவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 8,000 ஊழியர்கள் காஷ்மீரில் மாவட்டங்களுக்கு இடையேயான இடமாற்றக் கொள்கையின் கீழ் பணிபுரிகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் திரும்பி வந்து எங்கள் பணிகளைத் தொடரப் போவதில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் அங்கு பணியாற்றி வருகிறோம், ஆனால் குறிவைக்கப்பட்ட கொலைகள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பற்றதாகவும் பதட்டமாகவும் உணர்கிறோம் என்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் ரமேஷ் சந்த் கூறினார்.
முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட யாரும் பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக இல்லை என்பதால், மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையால் தாங்கள் விரக்தியடைந்துள்ளதாக மற்ற போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.