உத்தரப் பிரதேசத்தில் அரசின் மின் விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அலுவலர், அலுவலகத்தில் ஒசாமா பின் லேடனை புகழும் புகைப்படம் வைத்திருந்த காரணத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை, மூத்த அரசு அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.
தக்ஷினாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் துணைப்பிரிவு அலுவலராக பணிபுரிந்துவருபவர் ரவிந்திர பிரகாஷ் கெளதம். 'மதிப்பிற்குரிய ஒசாமா பின் லேடன், உலகின் தலைசிறந்த ஜூனியர் இன்ஜினியர்' என எழுதப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை இவர் அலுவலகத்தில் வைத்துள்ளார்.
இதுபற்றிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், அவரை மூத்த மாவட்ட அலுவலர் இடைநீக்கம் செய்துள்ளார். பின்னர், ஒசாமா பின் லேடனின் புகைப்படமும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரூக்காபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் சிங் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, தக்ஷினாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் துணைப்பிரிவு அலுவலரான ரவிந்திர பிரகாஷ் கெளதமை நிர்வாக இயக்குநர் இடைநீக்கம் செய்துள்ளார்" என்றார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கெளதம், "யாரை வேண்டுமானாலும் முன்மாதிரியாக கொள்ளலாம். உலகின் தலைசிறந்த ஜூனியர் இன்ஜினியராக ஒசாமா பின் லேடன் திகழ்ந்தார். அங்கிருந்து புகைப்படம் நீக்கப்பட்டாலும், என்னிடம் நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன" என்றார்.