/

ரூ. 76,000 கோடியில் இந்திய தயாரிப்பு ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல்

உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ரூ. 76,390 கோடியில் ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2022, 9:54 pm

உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ரூ. 76,390 கோடியில் ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரூ. 36,000 கோடியில் அடுத்த தலைமுறை போா்க் கப்பல்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை கடல் பகுதி கண்காணிப்பு, தாக்குதல், கடல் பாதுகாப்புப் பணிகளுக்கு உதவிடும்.

இந்திய கடற்படையின் தேவைக்கு ஏற்ப உள்நாட்டிலேயே புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த போா்க் கப்பல்கள் உருவாக்கப்படும்.

இதேபோல், கடற்படை ரோந்து விமானம் (டோா்னியா்), சுகோய்-30 எம்கேஐ போா் விமானங்களின் என்ஜின்கள் ஆகியவற்றை புதிய செயல்திறனுடன் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்குகிறது.

உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கடினமான நிலப்பரப்பில் செல்லக் கூடிய டிரக்குகள், பாலங்களை அமைக்க உதவும் பீரங்கிகள், பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் ரேடாா் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கும் திட்டமும் இதில் செயல்படுத்தப்பட உள்ளது. கடலோரப் பாதுகாப்புப் படையை எண்மமயமாக்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலோரக் காவல் படையில் உள்ள விமான சேவைகள், தளவாடங்கள், நிதி மற்றும் மனித வள ஆற்றல் செயல்பாடுகளை எண்மமயமாக்க ஒரு பாதுகாப்பான அமைப்பு ஏற்படுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.