2026-ல் முதல் புல்லட் ரயிலை இயக்கும் இலக்கை எட்டுவோம்: ரயில்வே அமைச்சர்

2026ஆம் ஆண்டில் குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலை இயக்கும் இலக்கை எட்டுவோம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 
2026-ல் முதல் புல்லட் ரயிலை இயக்கும் இலக்கை எட்டுவோம்: ரயில்வே அமைச்சர்
Published on
Updated on
1 min read

2026ஆம் ஆண்டில் குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலை இயக்கும் இலக்கை எட்டுவோம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

சூரத்தில் அரசின் லட்சியமான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தை இன்று ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயிலுக்கான உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

2026-ல் சூரத் மற்றும் பிலிமோரா இடையே முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான இலக்கை நாங்கள் வைத்துள்ளோம். இதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. குறித்த நேரத்தில் ரயிலை இயக்குவோம் என நாங்கள் நம்புகிறோம் என்றார். 

பிலிமோரா தெற்கு குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். புல்லட் ரயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே அதிவேக ரயில் நடைபாதையில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் 508 கிமீ தூரம் என 12 நிலையங்களில் இயக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம். 

இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை தற்போதைய 6 மணி நேரத்திலிருந்து சுமார் 3 மணி நேரமாக இந்த ரயில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் 81 சதவீதம் நிதியளிக்கிறது. இது ரூ.1.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாங்கள் உழைத்து வருகிறோம் என்றார். 

சூரத்தின் சோரியாசி தாலுகாவில் உள்ள வக்தானா கிராமத்திற்கு அருகில் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் செயல்பாட்டை வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அன்ட்ரோலி ரயில் நிலையத்தையும் பார்வையிட்டார். 

அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்டதற்கு, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் அது மெதுவாக செயல்படுவதாக கூறினார். இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா ஒத்துழைப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். இது ஒரு தேசியத் திட்டம், இதில் அரசியல் இருக்கக் கூடாது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com