லக்னௌவில் உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 6) உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முக தன்மை அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகின்றன. இந்த மாநிலத்தின் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகவும் நல்ல உதாரணமாக விளங்குகிறது.
இந்திய ஜனநாயகத்தின் விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் பெறவில்லை. புத்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சங்கங்களின் பணியில் இவற்றை நாம் காண்கிறோம் என அம்பேத்கர் கூறியுள்ளார். பண்டைக்காலத்தில்கூட கௌசாம்பி, ஷரவஸ்தி ஆகிய இடங்கள் இதுபோன்ற ஜனநாயக முறை இருந்ததற்கு உதாரணங்களாகும். இதுபற்றி அரசியல் நிர்ணயசபையில் பேசும் போது, டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமன்றத்தில் தற்போதுள்ள மக்களின் பிரதிநிதிகள் பண்டைக்கால ஜனநாயக பாரம்பரியத்தின் வாரிசுகள் ஆவர். நம் அனைவருக்கும் இது பெருமைக்குரிய விஷயமாகும். அதே சமயம் புத்தர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வது அவர்களின் பொறுப்பாகும்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 403 உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47. இது மொத்த எண்ணிக்கையில் 12 சதவீதம். . இதே போல் சட்டமேலவையில் மொத்தம் உள்ள 91 உறுப்பினரில், தற்போது 5.5 சதவீதம் அளவுக்கு 5 பெண்கள் இருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் முதலாவது பெண் முதலமைச்சரை தேர்ந்தெடுத்து உத்தரப்பிரதேசம் வரலாறு படைத்தது.
சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் விதியை தீர்மானிப்பவர்கள். இவர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் போது, மாநிலத்திற்கு பாடுபடுவதாக மட்டுமின்றி தங்களின் பகுதிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாடுபடுவதாக உறுதியேற்றுள்ளனர்” எனக் கூறினார்.