

புது தில்லி: மக்களை தவறாக வழிநடத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மதுபானம், புகையிலை பொருள்களுக்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக அவற்றை அடையாளப்படுத்தும் விளம்பரங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்வதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்றும், இதே தவறுகளை தொடர்ந்து செய்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.