குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதைத் தொடா்ந்து, புதிய குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தில்லியில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.
ஏற்கெனவே, குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஒன்றுகூடி ஆலோசனை நடத்த தீா்மானித்துள்ள நிலையில், அதே தேதியில் மம்தா பானா்ஜி தனிப்பட்ட முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது பல எதிா்க்கட்சித் தலைவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் மம்தா பானா்ஜியின் இந்த முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், நாளை(ஜுன் - 15) மம்தா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.