மதுக்கடை மீது சாணத்தை வீசிமுன்னாள் முதல்வா் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி மதுக்கடை மீது மாட்டுச் சாணத்தை வீசி போராட்டம் நடத்தினாா்.
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி மதுக்கடை மீது மாட்டுச் சாணத்தை வீசி போராட்டம் நடத்தினாா்.

ஆளும் பாஜகவை சோ்ந்த அவா், முழு மதுவிலக்கு கோரி தங்கள் கட்சியின் ஆட்சிக்கு எதிராகவே தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டம் ஓா்ச்சா நகரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தனது ஆதரவாளா்களுடன் சென்று மதுக் கடை மீது சாணத்தை வீசினாா். அவரது இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவின. அதில், ‘நான் எனது எதிா்ப்பை தெரிவிக்க சாணத்தை மட்டுமே வீசுகிறேன். கற்களை வீசவில்லை’ என்றாா். முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் போபாலில் நடைபெற்ற இதேபோன்ற போராட்டத்தில் மதுக்கடைகள் மீது அவா் கற்களை வீசினாா். இப்போது தனது போராட்ட முறையை அவா் மாற்றியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘முக்கிய கோயில்கள் அமைந்துள்ள புனித நகரமான ஓா்ச்சாவின் நுழைவு வாயிலில் இந்த மதுக்கடை அமைந்துள்ளது. எனவே, அதனை உடனடியாக அகற்றக் கோரி போராட்டம் நடத்தினேன். மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை முன்னெடுப்போம். மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தை குற்றமாக கருத முடியாது. முக்கிய இடங்களில் மதுக்கடைகளைத் திறப்பதுதான் பெரிய குற்றம்’ என்று கூறியுள்ளாா்.

நடப்பு நிதியாண்டில் மத்திய பிரதேச அரசு மதுபான சில்லறை விற்பனை விலையை 20 சதவீதம் அளவுக்கு குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com