தன் ஆதரவாளர்களான 42 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்எல்ஏக்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘40 எம்எல்ஏக்கள் இங்கு இருக்கிறார்கள். நாங்கள் பாலசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவாவின்படி நடக்கிறோம்' என்றும் தெரிவித்திருந்தார்.
குஜராத்திலிருந்து கிளம்பிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஏக்நாத்தின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.