மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ தனாஜி சாவந்த் அலுவலகம் கட்சித் தொண்டர்களால் சூரையாடப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான சிவசேனை எம்எல்ஏ-க்கள் அதிருப்தி எம்எல்ஏ-வான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக அசாமில் முகாமிட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்திலிருந்த அவர்கள் தற்போது அசாம் மாநிலத்திலுள்ள குவஹாட்டியில் உள்ளனர். இதனால், மகாராஷ்டிரத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.
மூன்று கட்சிகளும் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள அதிருப்தி எம்எல்ஏ தனாஜி சாவந்த் அலுவலகத்தை சிவசேனை தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூரையாடினர். அதிருப்தி எம்எல்ஏ சாவந்த் தற்போது அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ளார்.
முன்னதாக, அசாமிலுள்ள 38 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.