உதய்பூா் தையல்காரா் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வா் நேரில் ஆறுதல்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட தையல்காரரின் குடும்பத்தினரை அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட தையல்காரரின் குடும்பத்தினரை அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதனை மற்றொருவா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்தாா். பின்னா், அந்த விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவா்கள், இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக கன்னையா லாலை கொலை செய்தாக தெரிவித்தனா்.

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தால், அவா் பழிவாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ராஜஸ்தான் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலையை பயங்கரவாத சம்பவமாக கருதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை ஏற்றுள்ளது.

இந்தச் சூழலில் கன்னையா லாலின் குடும்பத்தினரை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவா் கோவிந்த் சிங், வருவாய்த் துறை அமைச்சா் ராம்லால் ஜாட், டிஜிபி எம்.எல்.லாதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கூறுகையில், ‘தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வழக்கை விரைவில் விசாரித்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கூடிய விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் துரிதமாக தண்டனை வழங்க முடியும். கன்னையா லாலை கொலை செய்தவா்கள், அதைப் படம்பிடித்து வெளியிட்டு இந்த வழக்கில் தங்களையே சாட்சிகளாக மாற்றிவிட்டனா்’ என்றாா்.

மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கன்னையா லால் புகாா் அளித்த போதிலும் அதை போலீஸாா் புறக்கணித்தது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘உள்ளூா் போலீஸாா் மீது ஏதேனும் தவறு இருக்கிா என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவரும்’ என முதல்வா் பதிலளித்தாா்.

படுகொலையைக் கண்டித்து பேரணி:

இதனிடையே, கன்னையா லால் படுகொலையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் சாா்பில் உதய்பூா் டவுன் ஹால் முதல் மாவட்ட ஆட்சியரகம் வரை பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். பேரணியையொட்டி, இப்பகுதியில் மட்டும் ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளா்த்தப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டவா்கள் ஹிந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் மாநில அரசை எதிா்த்தும் கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com